ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

பஞ்சவன்மாதேவீஸ்வரம் எனும் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை, பட்டீஸ்வரம்

பஞ்சவன்மாதேவீஸ்வரம் எனும் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை ,  பட்டீஸ்வரம் 

தன் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது,     
 தாஜ்மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் மகன் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?   அதுவும் தன்னை பெற்றெடுக்காத தாய்க்கு மகன் கட்டிய கோயில் அது. 
  
உலகமகா தேவியார், சோழ மாதேவியார், திருபுவன மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார்’ என பதினாறு பேரின் பெயர்கள்  ராஜ ராஜனின் மனைவிகள் என்றும்,   ‘நம் பெண்டுகள்’ என்று அவராலேயே தஞ்சைப் பெரிய கோவிலில் கொடைப்பற்றிய குறிப்பில் பொறித்து வைக்கப் பட்டுள்ளது. 

தந்திசக்தி விடங்கி என்றழைக்கப்படும் உலக மகா தேவியாரே பட்டத்து அரசி .

இராஜராஜ சோழன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தார் . 
இராஜராஜசோழனின் மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள்.

ஆனால் இராஜேந்திரனை மிகவும் பாசத்தோடு வளர்த்தவள் பழுவேட்டரையர் குலப்பெண்ணான பஞ்சவன்மாதேவி.

 ராஜேந்திரனை தவிர வேறு ஆண்வாரிசுகள் உருவாகி விடக்கூடாது என்ற திடமான முடிவில் இருந்தவள் பஞ்சவன்மாதேவி. அதற்காகவே தனக்கு குழந்தை பிறந்துவிடக்கூடாது, தான் மலடாகவேண்டும் என்பதற்காக மருந்தினை உட்கொண்டவள் இந்த பஞ்சவன்மாதேவி என்ற கதைகளும் உண்டு.

தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த அத்தகைய சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான்   கங்கை முதல் கடாரம் வரை வென்ற “ராஜேந்திர சோழன்”. 

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.   
 
இது கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரத்தில் அமையப்பெற்றுள்ளது.

பஞ்சவன் மாதேவியின் பூதவுடலை வைத்து அதன்மேல் சிவலிங்கம் வைத்து கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோயில் இது என்பது இதன் கூடுதல் சிறப்பு.


ஸ்ரீவிமானத்து அதிஷ்டானத்து கண்டப்பகுதியில் ராஜேந்திர சோழனின் 7ம் ஆட்சியாண்டில் (கி.பி.1019) பொறிக்கப்பெற்ற நீண்ட கல்வெட்டுச் சாசனமொன்று காணப்பெறுகின்றது. அதில் இவ்வாலயத்தை பள்ளிப்படை பஞ்சவன் மாதேவீஸ்வரம் என்றுள்ளது.

சிறிய ராஜகோபுரம் கடந்து கோயிலுக்குள் சென்றால் அழகிய ஸ்ரீவிமானம், அர்த்தமண்டபம் முகமண்டபம் ஆகியவற்றுடன் முழுதும் கருங்கற்களால் எடுக்கப்பெற்றதோர் ஆலயமாக பஞ்சவன் மாதேவீஸ்வரம் காட்சி நல்குகின்றது.. 

கோபுரம் கடந்து திருசுற்றை அடையும்போது மகாமண்டப வாயிலில் இரு துவார பாலகர், இத்தனை பேரழிவுகளையும் கடந்து அவ்வாலயத்தைக் காத்து நிற்கும் காட்சியை நாம் கண்டு மகிழலாம். 

பழுவேட்டரையர்களின் கலைப்பாணியில் அமைந்த சிற்பத்தூண்களையும், பிற சிற்பங்களையும் கண்டு ரசித்தவர்கள் இங்கு காணப்படும் அந்த சிம்மத்தூண் பழுவேட்டரையர் கலைப்பாணியில் அமைந்த ஒன்று என்பதை கண்டு கொள்வர்.

இங்குள்ள நந்தியின் பேரழகை எடுத்துக்கூறுதல் இயலாத ஒன்றாம். சலங்கை மாலைகளைக் கழுத்தில் கொண்டவாறு உயிரோடு ஒரு காளை படுத்திருப்பதை நாம் காண்போம். அதனைக் கையால் தொட்டால்தான் அது கல் என்பதை நாம் அறிவோம்.

கருவறையினுள் தாராலிங்கமாக ஈசன் அருள்பாலிக்கிறார்.
இறைவியின் பெயர் விமலநாயகி. 
இறைவியின் கைகளில் ஆறு விரல்கள் இருப்பதாக இங்கு பூஜை செய்பவர் கூறினார்.
















சோமநாத சுவாமி திருக்கோயில், கீழப்பழையாறை

 கீழப்பழையாறை :

குடந்தைக்கு அருகில் 5கிமீ தொலைவில் உள்ளது. 

கீழப்பழையாறை : சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம். 

பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை.

 பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று.  சோழர்களின் அரண்மனை கூட இங்கு இருந்தது என்ற செய்திகள் வரலாற்றில் உள்ளன.

சோழர் அரண்மனை இருந்த இடம் “சோழன்மாளிகை” என்னும் தனி ஊராக உள்ளது

இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் – பழையாறை நகர் என்றும்,              8-ஆம் நூற்றாண்டில் – நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டுகளில் – முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.

மங்கையர்க்கரசி நாயனார் அவதரித்த தலம்.

மங்கையர்க்கரசியார் – இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். 

அமர்நீதி நாயனார் அவதரித்த  தலம்


கீழப்பழையாறையில் கற்றளியாக இருந்த இடம் இன்று காலத்தின் கரங்களில் சிக்குண்டு சிதைந்தி நிற்கும் கோயில் உள்ளது.


இறைவன் : சோமநாத சுவாமி

இறைவி: சோமகமலாம்பிகை

பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் மூன்று தளங்களைக் கொண்ட புதிய ராஜகோபுரம் காணப்படுகிறது. அதற்கு அடுத்து உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி காணப்படுகிறது.

மூலவர் சன்னதிக்கு உயர்ந்த தளத்தில் படியேறி உள்ளே செல்லும்போது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் காணப்படும் ராஜகம்பீர மண்டபத்தைப் போல் உள்ளது. தேர் போன்ற அமைப்பினைக் காணமுடிகிறது.

தாராசுரம் கோவிலின் முன்மாதிரியாக இக்கோயில் இருந்திருக்க வேண்டும்.

அக்கோபுரத்தினை அடுத்து வலப்புறம் இக்கோயிலுக்கான இறைவியான சோமகமலாம்பிகை சன்னதி உள்ளது. 

சோமகமலாம்பிகை சன்னதிக்குச் செல்லும் படிக்கட்டில் தென்திசையில் உள்ள வீரநரசிம்மர் சிற்பத்தின் கிழக்கு புறத்தில் சிற்றுவத்தில் வீரன் ஒருவன் உடைவாளை உருவியபடி நிற்க, அவனது தலையின் மீது சிவன் தனது வலது காலை ஊன்றியும், இடது காலை தன்னுடைய தலைக்கு மேல் கொண்டுவந்து வலது காதைத் தொடும் நிலையில் உள்ள காட்சி ஊர்த்துவ தாண்டவமாக வடிக்கப்பட்டுள்ளது.


ராஜராஜனின் தமக்கை குந்தவைக்கு மிகவும் பிடித்த கோயிலாம் இது. ஆனால் இன்று இறைவனும், இறைவியும் ஏகாந்தமாக இருக்கிறார்கள். அவ்வப்போது நாமும் சென்று அவர்களது மோனநிலையை கலைப்போம். 




























ராஜராஜசோழன் பள்ளிப்படை, உடையாளூர்

 கும்பகோணம் நகரில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ளது ஸ்ரீசிவபாதசேகரமங்கலம் எனும் உடையாளூர் .


 முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்திரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி. 1112) ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்தில்  (உடையாளூரில்) ராஜராஜதேவரின் திருவுருவம் திகழ்கின்ற ஸ்ரீசிவபாதசேகர தேவர் திருமாளிகை என்ற பெயரில் மாளிகை ஒன்று இருந்துள்ளது. 


அம்மாளிகையின் முன்பகுதியில் அமைந்திருந்த மண்டபப்பகுதி சிதைவடைந்து காணப்பெற்றதால் பிடவூர் எனும் ஊரினைச் சார்ந்த பிடவூர் வேளாண்வேளிர் அரிகேசவனான கச்சிராஜர் என்பவர் அப்பகுதியினை மீண்டும் எடுப்பித்து புனர்நிர்மாணம் செய்தார் என்ற கல்வெட்டு உடையாளூரில் உள்ளது.


இதனால் உடையாளூரில் முதலாம் ராஜராஜ சோழனின் திருவுருவம் எழுந்தருளப்பெற்ற ஒரு மாளிகை  இருந்தது என்பது உறுதியாகின்றது.


 அது முதலாம் இராஜராஜ சோழனின் நினைவு மாளிகையே, அதனை பள்ளிப்படை (சமாதி கோயில்) எனக்கூட கருத வாய்ப்புள்ளது.


அந்த மாளிகை உடையாளூரின் எப்பகுதியில் இருந்தது என்பது இதுகாறும்  உறுதி செய்ய இயலவில்லை. உள்ளூர் ஆற்றங்கரை அருகில் ஒரு வாழைத்தோட்டத்தில் புதைந்த நிலையில் காணப்பெறும் சிவலிங்கம் திகழும் இடமே அப்பண்டைய மாளிகை என்பது அமரர் என். சேதுராமன் என்ற ஆய்வு அறிஞரின் முடிவாகும்.


அதனையே ராஜராஜசோழன் பள்ளிப்படையாக கருதி ஊர்மக்கள் வழிபாடு செய்கின்றனர்.


2013ல் பார்த்தபோது இருந்ததற்கும் 2022க்கும் அந்த இடத்தில் சிறிய மாற்றங்கள் உள்ளன. 








தென்னகத்தையே ஆட்சி செய்தவனின் அடையாளமே இன்று காணவில்லை. இதில் நாமெல்லாம் எம்மாத்திரம் ??




திங்கள், 31 அக்டோபர், 2016

ஸ்ரீராஜராஜ சோழனின் காலடியில்…………..

                              ‘கும்பகோணம் - பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது’ என்றொரு தகவலைத் தன் ஆராய்ச்சியின் மூலம் வெளியுலகுக்கு அறிவித்திருக்கிறார், கும்பகோணத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் சேதுராமன்.இவரது இந்த அறிவிப்பு, மற்றவர்களாலும் நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

                கும்பகோணத்தில் இருந்து ஆறாவது கிலோமீட்டரில் இருக்கும் உடையாளூர் கிராமத்துக்குச் சென்றோம். பச்சைப் பசேலென்று கண்களுக்குள் குளிர்ச்சியை அள்ளித் தெளிக்கிறது அந்தக் கிராமம். சின்ன சந்தில் உள்ள குடிசை வீட்டுக்கு போய் ‘ராஜராஜன் சமாதி’ என்று கேட்டால் குடிசையில் இருக்கும் பெரியவர் பக்கிரிசாமி அந்த வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழைத் தோப்புக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கே ஓரிடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் தெரிகிறது. அதற்கு எதிரே விளக்கேற்ற ஒரு மாடம் தெரிகிறது. அதைக் காட்டி இதுதான் ‘ராஜராஜன் சமாதி’ என்கிறார் கிராமத்தில் இருக்கும் வயோதிக சிவாச்சாரியாரான வைத்தியநாதர் என்பவர்.

             "கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சேதுராமன்  மைசூரில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு படிகளைப் பார்த்தபோது, இங்குள்ள பெருமாள் கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று இருப்பதையும் , அதில் ராஜராஜ சோழன் எழுந்தருளி இருக்கும் நினைவு மண்டபம் சிதிலமடைந்து இருந்ததாகவும் அதை சரிசெய்ததாகவும் பொறிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்திருக்கிறார். உடனே இங்கு வந்து பெருமாள் கோயிலை ஆய்வு செய்தார். அப்போதுதான் ராஜராஜன் நினைவுமண்டபத் தூண் இருக்கும் விஷயமே வெளியில் தெரிந்தது. அதற்குப் பிறகு குடவாசல் பாலசுப்ரணியமும் அவரும் அந்தத் தூணை தேடும்போதுதான், கிடைக்காமல் என்னிடம் வந்து கேட்டார்கள். பால்குளத்து அம்மன் கோயிலைப் புதுப்பிக்கும்போது, ஒரு தூண் தேவைப்பட்டதால் பெருமாள் கோயிலில் இருந்த அந்தத் தூணை அங்கே எடுத்துப்போய் வைத்து விட்டோம் என்றேன். உடனே அங்கு சென்று பார்த்தபோது அது ராஜராஜன் நினைவு மண்டபத் தூண் என்பதற்கான எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதைத் தொல்பொருள் துறையினரும் படியெடுத்து ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் எல்லோரும் ராஜராஜன் நினைவிடம் இங்குதான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்கள்" என்றார் வைத்தியநாதர் . 


              ராஜராஜன் நினைவிடத்தில் குடிசைகட்டி வாழ்ந்து வரும் பக்கிரிசாமி  "கோயில் இடமான இதில் எங்க அப்பா காலத்திலிருந்து குடியிருக்கிறோம். இரண்டு வருஷத்துக்கு முந்தி ஒருநாள் மழை பெஞ்சப்போ, இந்த இடத்துல திடீர்னு மண் உள் வாங்கிடுச்சு. அப்போ கொஞ்ச ஆழத்துக்கு மண்ணைத் தோண்டிப் பார்த்தேன். உள்ளே எண்கோண வடிவில் கட்டடம் போன்ற அமைப்பு இருந்தது. என்ன ஏதுனு புரியாததால அதை அப்படியே மூடிட்டேன். இப்பதான் இது ராஜா சமாதின்னு தெரிஞ்சுகிட்டேன். அதற்கப்புறம் தினமும் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி விளக்குக் கொளுத்தி வைக்கிறேன் " என்றார். 


              இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டி வரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியனிடமும் இதுகுறித்துப் பேசினோம். "அந்த இடத்தில்தான் ராஜராஜ சோழன் சமாதி இருக்கும் என்பதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்லத்தகுந்த ஆதாரங்கள் இல்லைதான். ஆனால், அதுவாகத்தான் இருக்கும் என்பதற்கு 90 சதவிகித சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதைப்பற்றி பேசுவதற்குள் அதை சமாதி என்று சொல்வது தவறு. அவனது அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மீது எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயிலாகவோ ,  நினைவு மண்டபமாகவோகூட அது இருக்கலாம். அதனால் அதை நினைவிடம் என்று அழைக்கலாம்.

               சோழ மன்னர்களின் குடும்பத்தினர் தஞ்சையில் அரசாண்டாலும் அவர்கள் வசிக்கும் மாளிகைகள் பழையாறையில்தான் இருந்தது. அதோடு ராஜராஜ சோழனின் மனைவியர்களில் ஒருவரான பஞ்சவன் மாதேவியினுடைய பள்ளிப்படைகோயில், பட்டீஸ்வரத்தில்தான் இருக்கிறது. அதனாலும் அந்த நினைவு மண்டபத் தூணாலும் அந்த இடம் ராஜராஜ சோழனின் நினைவிடம்தான் என்று உறுதியாக சொல்லலாம். கங்கைகொண்ட சோழபுரத்தையும், தஞ்சாவூரையும் அகழ்வாராய்ச்சி செய்ததைப் போல, இங்கும் மத்திய தொல்பொருள் துறை முழுவீச்சில் அகழாய்வு செய்தால், இன்னும் பல சரித்திர சான்றுகள் கிடைக்கும்" என்றார்.

                 சென்னையில் இருக்கும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தோம். "உடையாளூர் கோயில் கல்வெட்டில் ‘மகேஸ்வரதானம்’ என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
அது இறந்தவர்களுக்காகக் கொடுக்கப்படுவது. அதோடு ராஜராஜேஸ்வரம் என்ற கோயில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது ராஜராஜனுடைய அஸ்திமேல் எழுப்பப்பட்ட கோயிலாக இருக்கலாம். அதோடு பால்குளத்து அம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டுத் தூணையும் பார்க்கிறபோது, அந்த இடம் ராஜராஜன் நினைவிடமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வது சம்பந்தமாக தங்களிடம் திட்டம் ஏதும் இல்லை’’ என்றனர்

முண்டாசுக்கவியே ! மீண்டு வா – மீண்டும் வா !

நரை கூடி
கிழப்பருவம்
கூடுமுன்னே
கரை கடந்த புயலே !
முண்டாசுக்கவியே !
மீண்டு வா – நீ
மீண்டும் வா !

சாதிக்கொன்றாய்
சங்கம் கொண்டு
நாட்டை துண்டாடும்
நயவஞ்சகக் கூட்டம்தனை
விரட்டியடித்திட
விரைந்து வா விடியலே !

நூற்றாண்டுகள் மாறியபோதும்
சாதிமத இருள் இன்னும்
மண்டியே கிடக்கிறது
மனத்துக்குள்ளே !

காரிருள் கலைத்து
சுதந்திர பகலை சொந்தமாக்கிட
கவிதைக்கதிர் பரப்பி வா 
கதிரவனே !


அடே காலனே !
சிறு புல்லாக
உன்னை மதித்த கவிஞனை
கள்ளத்தனமாக
கவர்ந்து சென்ற காலனே !
கண்ணியமாய்
உனக்கொரு கடைசி செய்தி !

சுயநல வெம்மை சுட்டெரிப்பதால்
பாரதம் இங்கே
பாலையாக தகிக்கிறது !

சுகந்தம் பரப்பும்
சோலையாய் அதை மாற்ற
எங்கள்
சமதர்மத் தென்றலை
சம்மதித்து அனுப்பிவிடு !
சமாதானம் கொள்வேன் உன்னோடு !

வெட்டிக்கதை பேசி - நாட்டை
குட்டிச் சுவராக்கும்
குள்ளநரி கூட்டம்தனை
வேட்டையாடி விரட்டிட ,  
எட்டயபுர சிங்கத்தை
பவ்யமாக அனுப்பிவை !
பாவமென விடுவேன் உனை !

கனவுத் தேடலிலே
வாழ்வை தொலைத்து விட்டு
இருளிலே தடுமாறும்
மனிதர்களை
விழித்தெழ செய்யும் 
விடியலை
விரைந்து அனுப்பிவை !

தாமதமாகுமெனில்......
அவன் 
முண்டாசையாவது
முன்னால் அனுப்பிவை !

ஞாயிறு, 25 மார்ச், 2012

உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11




1987-ஆம் ஆண்டு ஜுலை 11-ஆம் நாள் உலக மக்கள்தொகை 500 கோடியை தாண்டியது. மக்கள்தொகை பெருக்கத்தின் அபாயத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது ஜுலை 11-ஆம் நாளை “உலக மக்கள் தொகை தினமாக” அறிவித்தது. 1901-ல் 160 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 1960-ல் 300 கோடியாகவும், 1974-ல் 400 கோடியாகவும், 1987-ல் 500 கோடியாகவும் அதிகரித்தது். தற்போது உலக மக்கள் தொகை 690.8 கோடியாக உள்ளது.. இந்த தினத்தில் பெருகிவரும் மக்கள்தொகை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதுடன், அதனை கட்டுபடுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்பதையும் அறியச்செய்ய வேண்டும். 2011 -ம் ஆண்டின் உலக மக்கள் தொகை தின செய்தியாக “அவசரமான உளகளாவிய பிரச்சனைகளின் மீது கவனத்தை கொணர்தல்” ( Calling Attention to Urgent Global Issues ) என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.



இந்தியா – தமிழ்நாடு - புள்ளிவிவரம்

2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 102.9 கோடியாகும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை 6.2 கோடியாகும். 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாகும். தமிழ்நாட்டின் தற்போதய மக்கள்தொகை 7.2 கோடியாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது. 135 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக திகழ்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.38 சதவிகித மக்கள்தொகை வளர்ச்சி ஏற்படுகிறது. அதாவது மக்கள்தொகை நாளொன்றுக்கு சராசரியாக 44353 அதிகரிக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 51 குழந்தைகள் இந்தியாவில் பிறக்கின்றன. ஆனால் “ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை” என்ற கட்டாய சட்டத்தின் மூலம் சீனாவில் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி 0.49 சதவிகிதமாக உள்ளது. இதே நிலை தொடருமானால் 2050-ல் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ” உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு” என்ற முதலிடத்தை இந்தியா பிடிக்கும். 2050-ல் இந்தியாவின் மக்கள்தொகை 180 கோடியாகவும், சீனாவின் மக்கள்தொகை 142 கோடியாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.



மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவுகள்:

பெருகிவரும் மக்கள்தொகையால் விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறிவருகின்றன. இதனால் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி குறைகிறது. நீர்நிலைகள் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு வருகிறது. நிலத்தடி நீர்வளம் குறைந்துபோகிறது.

மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. தனிநபர் வருமானம் குறைகிறது. குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குழந்தைகளின் கல்வி, உணவு, நலம் போன்றவற்றை பாதிக்கிறது. சரிவிகித உணவு கிடைக்காமல் போவதால் உடல்நலம் , சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அடிப்படைத்தேவைகள் முழுதும் கிடைக்காமல் போகிறது. வருங்கால சமுதாயம் பாதிப்புக்கு உள்ளாவதால் கொலை, கொள்ளை, தீவிரவாதம் போன்றவை சமுதாயத்தில் வளர்கின்றன. இவை மட்டுமின்றி இயற்கை வளங்கள் தட்டுப்பாடு, சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு, உலக வெப்பமாதல் போன்றவற்றிற்கும் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக அமைகிறது.



குடும்பநலம் :

1952-ம் ஆண்டு இந்தியா “தேசிய குடும்பநலத் திட்டத்தை” உலகில் முதல்முறையாக செயல்படுத்தியது. குடும்பநலம் என்பது குழந்தை பிறப்பதை தடுப்பது மட்டுமல்ல, பேறுசார் மற்றும் தாய்சேய் நலத்தை பாதுகாத்து, குழந்தை பருவம், வளரிளம் பருவம், தம்பதியர் நலம் என ஒவ்வொரு நிலையிலும் நலமாக வாழவைப்பதாகும். குடும்பநல முறைகளை மேற்கொள்வதால் அளவான குடும்பம் அமைகிறது. தாயின் உடல்நலத்தோடு, குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல்நலமும் பேணப்படுகிறது. அளவான குடும்பம் வளமாக வாழ்கிறது. குடும்பநலத் திட்டத்தின் காரணமாக பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சிசு மரண விகிதம் போன்றவை குறைக்கப்பட்டுள்ளன.



ஆண்களுக்கான நவீன தழும்பில்லா வாசக்டமி குடும்பநலமுறை, பெண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சை போன்றவை நிரந்தர கருத்தடை முறைகளாகும். கருத்தடை வளையம் (Copper – T ), கருத்தடை மாத்திரைகள், அவசரகால கருத்தடை மாத்திரைகள், நிரோத் போன்றவை தற்காலிக கருத்தடை முறைகளாகும்.



நவீன தழும்பில்லா குடும்பநல வாசக்டமி குடும்பநலமுறை ஏற்கும் ஆண்களுக்கு ரூபாய் 1100 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது, பெண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சையை விட, ஆண்களுக்கான நவீன தழும்பில்லா வாசக்டமி முறை எளிதானது. இம்முறையில் உள்நோயாளியாக தங்கவேண்டிய அவசியமில்லை. இரத்த இழப்பின்றி, தையலின்றி ஒருசில நிமிடங்களில் வாசக்டமி செய்யப்பட்டுவிடும். ஆண்மைகுறைவு ஏற்படுவதில்லை. தாம்பத்திய வாழ்க்கை சுகமாக இருக்கும். அன்றாட பணிகளை வழக்கம்போல செய்யலாம்.

பெண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சைக்கு ரூபாய் 600 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. பெண்களுக்கான கருத்தடை வளையம் ஒருமுறை பொருத்திக்கொண்டால் 10 வருடங்கள் வரை குழந்தை பிறப்பை தவிர்க்கலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள் ஆகிய இடங்களில் கருத்தடை வளையம் இலவசமாக பொருத்தப்படும்.



கடமை:

எனவே நாட்டுமக்கள் அனைவரும் “சிறு குடும்பம் – சீரான வாழ்வு” என்ற நெறியினை பின்பற்றினால் வீடு மட்டுமல்ல, நாடும் வளம்பெறும். நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் எரிபொருள்கள் போன்றவை வருங்கால தலைமுறைக்கு கிடைக்காமல் போகும் நிலை கூட வரலாம். எனவே மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும். இந்த உலக மக்கள்தொகை தினத்தில் மக்கள்தொகை பெருக்கம் பற்றிய விழிப்புணர்வை பெறுவதும், ஏற்படுத்துவதும் நம் அனைவருடைய கடமையாகும்.

சனி, 4 ஜூலை, 2009

நாங்கள் வளர்ந்துவிட்டோம் !




நாங்கள் வளர்ந்துவிட்டோம் !
நாகரிகத்தில் உயர்ந்துவிட்டோம் !

கவண் வீசி
கல்லெறிந்து
காட்டு விலங்கை
வேட்டையாடிய
காலமது கற்காலம் !

விமானம் மோதி
வெடிகுண்டு வீசி – மனித
உயிர் குடிக்கும்
உன்னத காலம் – இக்காலம் !

அன்றோ –
காலரா , அம்மையென
கொள்ளை நோய்கள்
கொண்டு சென்ற
மக்கள் உயிர் கணக்கு
சொல்லி மாளாது !

இன்றோ –
மனிதன் கண்டறிந்த
ஹைட்ரஜன் குண்டெறிந்தால்
பூமிதனில் – ஒரு
புல்பூண்டு மீளாது !


கோடிகோடியாய்
கொள்ளையடித்தும்
தர்மம் வெல்லும் – என
தத்துவம் பேசும்
அரசியல் கூத்து ஒருபுறம் !

உழைத்தும் பயனின்றி ,
ஒருவேளை உணவின்றி ,
குடும்பமே கொண்டவழி
தற்கொலைதான் என
பட்டினி சாவுகள் மறுபுறம் !

தொழிலுக்கேற்ப
சாதிமுறை
சொல்லிவைத்தது அக்காலம் !

ஜாதிக்கொன்றாய்
கட்சி கொண்டு - நாட்டு
ஒற்றுமைக்கு
கொள்ளிவைப்பது
இக்காலம் !


ஆயிரம் புத்தர் என்ன ?
அஹிம்சைசொன்ன காந்தி என்ன ?
காதுகளை தொலைத்துவிட்டோம் !

எல்லாம்வல்ல இறைவனையே
அல்லா , கிறிஸ்து , கிருஷ்ணன் என
மதத்திற்கொன்றாய்
பிரித்துவிட்டோம் !

மதம் கொண்டலையும்
மனித இனம்
நிதம் கொன்று தின்கிறது
தன் இனத்தை !

நாகரிக இமயத்தை
தொட்டுவிட்டபின்பும்
விட்டுவிடவில்லை
தன் மிருககுணத்தை !

அறிவின் முதிர்ச்சியில் ,
அறிவியல் வளர்ச்சியில் ,
அண்டத்தையே
அளந்துவிட்டோம் !

க்ளோனிங் மாடல் ,
குரோமோசோம் தேடல் - என
பிரம்மன் தொழிலையே
பிளந்து விட்டோம் !

நிலவின் நிறமறிந்து ,
செவ்வாயின் குணமறிந்து ,
சூரியனின் சுகமறியும்
விஞ்ஞானத்தில்
வளர்ந்துவிட்டோம் !

மனிதநேயம் மட்டும்தான்
மறந்துவிட்டோம் !

மனதின் அளவில் மட்டும்
மாறாமல் இருந்துவிட்டோம் !

புறவாழ்வில் புன்சிரிப்பு !
அகவாழ்வில்
சுகம்காணா தவிதவிப்பு !

தங்கம் வைரத்தை
தோண்டிப்பார்த்த
இரும்புமனம் -
இதயத்தை மட்டும்
எங்கும்
தேடிப்பார்க்கவில்லை !

அறிவின் வெளிச்சத்தில் ,
நாகரிக விளிம்பில்
நடைபோட்டாலும்
மனதில் இருள் மட்டும்
மண்டியே கிடக்கிறது !

பாலையாக தகிக்கும்
பாதை இதை
பனியாக குளிரச்செய்யும்
வசந்தம் ஒன்று
வருவது எப்போது ?

இருளகற்றும் பரிதியே !
எழுச்சியின் விடியலே !
எழுந்து வா ! விரைந்து வா !
எதிர்படும் இடர்யாவும்
கதிர்படும் பனியென
கரைந்து ஓடட்டும் !
துயர் தொலைத்து
மனித இனம்
மனம் நிறைய
மகிழ்ச்சி கீதம் பாடட்டும் !

ஞாயிறு, 21 ஜூன், 2009

காத்திருப்பேன்


பார்த்து ரசித்தேன் சிலநேரம் !
பாராமல் தவித்தேன் பலநேரம் !!

பேசி சிரித்தாய் சிலநேரம் !
பேசாமல் வதைத்தாய் பலநேரம் !!

கனவில் நிலைத்தாய் சிலநேரம் !
கண்ணுறக்கம் கலைத்தாய் பலநேரம் !!

புனலாக குளிர்ந்தாய் சிலநேரம் !
தனலாக தகித்தாய் பலநேரம் !!

பூந்தென்றலாய் பூசினாய் சிலநேரம் !!
புயலாக வீசினாய் பலநேரம் !!

என்னுடல் தழுவினாய் சிலநேரம் !
என்னுயிர்விட்டு நழுவினாய் பலநேரம் !!

விழிகளில் நீ இருந்தாய் சிலநேரம் !
விழிகளில் நீர் இருந்தது பலநேரம் !!

செவ்வானில் சிறகடித்தேன் சிலநேரம் !
கண்ணீரில் நான் மிதந்தேன் பலநேரம் !!

முத்தத்தின் நுட்பம் அறிந்தேன் சிலநேரம் !
யுத்தத்தின் வெட்பம் உணர்ந்தேன் பலநேரம் !!

எனக்காக அழுதிருந்தேன் சிலநேரம் !
உனக்காக தொழுதிருந்தேன் பலநேரம் !!

உன் நினைவால் வாழ்கிறேன் சிலநேரம் !
உன் பிரிவால் வீழ்கிறேன் பலநேரம் !!

நானாக நானிருந்தேன் சிலநேரம் !
நீயாக வாழ்ந்திருந்தேன் பலநேரம் !!

உன்னோடு நானிருந்தேன் சிலகாலம் !
உனக்காக காத்திருப்பேன் பலகாலம் !!